ஏதிர்மறை (நெகடிவ்) சிந்தனையும் தேவை

ஒவ்வொரு விஷயத்திலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் விஷயங்கள் கலந்தே இருக்கின்றன. அவையே ஒரு வட்டத்தை இணைக்கும் இரண்டு புள்ளிகளாகின்றன. இரண்டும் இல்லாமல் செயல் இல்லை, இயக்கமும் இல்லை. – ஜான் மெக்டனால்ட்

பாசிடிவ் சிந்தனைகள் குறித்து மட்டுமே பெரும்பாலும் நாம் கேட்கிறோம். நெகடிவ் திங்கிங் என்பது சாவான பாவம் போல ஒதுக்கியே வைத்து விடுகிறோம். ஆனால் வாழ்க்கையில் இரண்டும் கலந்த நிகழ்வுகளே எழுகின்றன. சில இடங்களில் நெகடிவ் சிந்தனைகள் கூட நம்மை வழிநடத்திச் செல்லும் என்கிறார் டாக்டர். ஜேம்ஸ் டாப்ஸன்.

காரில் ஏறி அமர்கிறோம். உடனே சீட் பெல்ட் அணிந்து கொள்கிறோம். அல்லது “எல்லாரும் சீட் பெல்ட் போடுங்க“ என்று சொல்கிறோம். இதன் காரணம் என்ன ? ஒருவேளை ஆக்சிடன்ட் ஆச்சுன்னா என்ன பண்றது ? சீல் பெல்ட் போட்டா உயிர் தப்ப வாய்ப்பு இருக்கு. இல்லேன்னா உயிருக்கே ஆபத்து தான் போன்ற எதிர்மறை சிந்தனைகள் தான் இல்லையா ? விபத்து நடந்தால் எனும் எதிர்மறைச் சிந்தனை தான் நம்மை சீட் பெல்ட் அணியத் தூண்டுகிறது.
“ஒரு லைஃப் இன்சூரன்ஸ் வாங்கி வைக்கணும்ங்க. ஒருவேளை நாம பொட்டுன்னு போயிட்டா பிள்ளைங்க நாளைக்கு நடுத் தெருவில நிக்கக் கூடாது” என பரிதவிக்கும் ஒரு தந்தையிடமும் ஒரு நெகடிவ் சிந்தனையே எழுகிறது. அந்த எதிர்மறைச் சிந்தனை தான் அவரை ஒரு ஆயுள் காப்பீடு வாங்க தூண்டுகிறது.

கஞ்சா பொட்டலம் கையில் இருந்தாலும் தூக்கித் தூர எறியவேண்டும் எனும் எண்ணம் தோன்றுவதில் கூட கொஞ்சம் நெகடிவ் சிந்தனை இருக்கும். “இதைச் சாப்பிட்டு, இதுக்கு அடிமையாகி, உருப்படாதவனா, கெட்டவனா, நோயாளியா வாழ்வதா ?” என்பன போன்ற எதிர் சிந்தனைகளே தீய பழக்கங்களை விட்டு நம்மை விலக்குகிறது. “நாம் செய்கின்ற இந்தச் சிற்றின்பத் தப்பு வெளியே தெரிஞ்சா என்ன ஆகும்” எனும் பயம் கலந்த நெகடிவ் சிந்தனை தான் நம்மை அந்த விஷயத்தை விட்டு வெளியே செல்ல தூண்டுகிறது.
எனவே நெகடிவ் சிந்தனை என்பது ஒட்டு மொத்தமாகக் கெட்டதல்ல. அது சில நல்ல முடிவுகளை எடுக்க நமக்கு உதவுமானால் அந்த சிந்தனைகள் நல்லதே. எந்த முடிவை எடுத்தாலும் அதை புத்திசாலித்தனத்துடனும், நல்ல சிந்தித்தும் எடுங்கள் என்கிறார் டாக்டர் ஜேம்ஸ் டாப்ஸன் சொல்லும் அறிவுரையாகும்.

மெல்லிய நெகடிவ் அலைகள் நம்மைச் சுற்றி அதிக அலர்ட் ஆக இருக்க வைக்கும். நாம் சார்ந்த சூழலைக் குறித்த விழிப்புணர்வு நமக்கு அதிகம் இருக்க உதவும். கொஞ்சம் நெகடிவ் சிந்தனை இருப்பது நல்லதே என்கிறது “நியூ சவுத் வேல்ஸ்” பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. நேர்சிந்தனைகளையும், சில நேர் விளைவுகளையும் நெகடிவ் சிந்தனைகள் உருவாக்கி விட முடியும்.

எதிர் சிந்தனைகளின் விளைவுகள் பாசிடிவ் ஆக இருந்தால், அல்லது எதிர் சிந்தனைகள் நம்மை ஒரு எச்சரிக்கை உணர்வுக்கு கூட்டிச் சென்றால் அதை வரவேற்பதில் தவறில்லை. “நாய் கடிக்குமோ” எனும் பயத்தில் வெறிநாய்களை விட்டு விலகிச் செல்வது ஒரு எச்சரிக்கை உணர்வு. ஓடும் யானைக்கு எதிரே நிற்காமல் விலகி நிற்பது புத்திசாலித்தனமான முடிவு. கடுகடுப்பான பாஸ் திட்டக் கூடும் என கவனமாய் இருப்பது நல்லது. இப்படி எதிர்மறைச் சிந்தனைகளெல்லாம் செயல்களை நேர்கோட்டில் கொண்டு நிறுத்தினால் அவை வரவேற்கப்பட வேண்டியதே.

உலக இலக்கியங்களில் பலவும் மனிதர்கள் உணர்ச்சியின் மிகுதியால் இருக்கும் போது உருவானவையே. தார்மீகக் கோபம், காதலின் சோகம், துரோகத்தின் கசப்பு இவையெல்லாம் உலக இலக்கியங்களில் உன்னத இடத்தைப் பிடித்திருக்கின்றன.

பாசிடிவ் விஷயங்கள் நெகடிவ் செயல்களை ஏற்படுத்துவதுண்டு. ஹிரோஷிமாவை அழித்துத் துவம்சம் செய்த அணுகுண்டைப் போல. நெகடிவ் விஷயங்கள் நம்மை பாதுகாப்பதும் உண்டு, கார் சீட் பெல்ட் போல. எந்த விஷயத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
மரணம் குறித்த சிந்தனை நம்மை வாழத் தூண்டவேண்டும். நெகடிவ் சிந்தனை நம்மை பாசிடிவ் வாழ்க்கைக்கு வழிநடத்த வேண்டும். அது தான் முக்கியம் !

— வெற்றி மைந்தன்

840 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *