யாழ்ப்பாணம் போவோமா

யாழ்ப்பாணம் நாங்கள் பிறந்து, வளர்ந்து, தவழ்ந்து, திரிந்த இடமாக இருந்தாலும், தாய் மண்ணை விட்டு புலம்பெயர் பெயர்ந்து வந்த பின்னர், விடுமுறைக் காலங்களில் மீண்டும் யாழ்ப்பாணம் போய் வருவது என்பது உணர்வுகளுக்கும் உடம்பிற்கும் புத்துணர்ச்சியளிக்கும் ஒரு அழகான அருமையான அனுபவம்.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் எங்கள் பிள்ளைகளை மீண்டும் யாழ்ப்பாணம் கூட்டிக் கொண்டு போவது ஒரு சவாலான ஆனால் இனிமையான அனுபவம் தான். மீண்டும் மீண்டும் அப்பா, அம்மா படித்த பள்ளிக்கூடங்களைக் காட்டியும், பழைய சொந்தக்காரரை கட்டிப்பிடிக்க வைத்தும் அவங்களிற்கு வெறுப்பேற்றாமல், எங்களது மண் படைக்கும் அற்புதமான அனுபவங்களையும் நினைவுகளையும் பிள்ளைகளின் மனதில் விதைப்பதில் தான் எங்களின் சந்தோஷமும் தங்கியிருக்கிறது.

விடுமுறைகளை கழிக்க நாங்கள் அடிக்கடி யாழ்ப்பாணம் போவதும், யாழ்ப்பாணத்திற்கு போய் விட்டு வந்து அங்கு நாங்கள் அனுபவித்த நாட்களைப் பற்றி புளுகுவதையும் பார்க்கும் சிலருக்கு வியப்பாக இருக்கும். “யாழ்ப்பாணம் ஒரு காஞ்ச இடமெல்லோ.. அங்க போய் என்னத்தை நதெழல பண்ணுறது” என்று புறுபுறுப்பார்கள். “பிள்ளைகளுக்கு அலுப்படித்திருக் குமே?” என்ற கேள்வியும் தவறாமல் வரும்.
யாழ்ப்பாணத்தில் வளர்ந்த காலங்களில், நாட்டு பிரச்சினையால் அம்மா அதிகம் உலாத்த விட மாட்டா. வீட்டில் இருந்து பள்ளிக்கூடம், டியூஷன், மிஞ்சி மிஞ்சி போனால், நல்லூரடியில் இருந்த அம்மாவின் அலுவலகமான யாழ் மாநகர சபை கட்டிடம், அவ்வளவு தான் நாங்கள் போய் வர அனுமதிக்கப்பட்ட எல்லைகள்.

1990 Big Match மூட்டம், முகத்திற்கு handkerchief கட்டிக் கொண்டு தின்னவேலி சந்தி தாண்டியது ஏதோ இந்தியாக்காரன் பாக்கிஸ்தான் borderஐ தாண்டியது போன்ற திகில் அனுபவமாக இருந்தது. அதன் பிறகு எப்ப யாழ்ப்பாணம் போனாலும் யாழ்ப்பாணத்தை சுற்றி சுற்றி பார்ப்பதே வேலையாகி விட்டது, இன்னும் சுற்றிப் பார்த்து முடியவில்லை.

யாழ்ப்பாணம் எங்களது இதய பூமி என்ற உணர்வு பூர்வமான இணைப்பிற்கு அப்பால், குடும்பத்தோடு விடுமுறையை கழிக்க உலகில் இருக்கும் ஒரு மிகச்சிறந்த பிரதேசமாக யாழ்ப்பாணம் மாறி வருகிறது. யாழ்ப்பாணம் செல்லும் புலம்பெயர் தமிழர்கள் பலர், அந்தக் காலத்து பயத்தில் உறவினர் வீடுகளிலும் ஹோட்டல்களிலும் அடைபட்டு இருந்து விட்டு வருவதால், இன்றைய யாழ்ப்பாணம் படைக்கும் பல அற்புத அனுபவங்களை தவறவிட்டு விடுகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்னர், பருத்தித்துறை ஓடக்கரை வீதி அப்பம் பற்றிய அருமையான காணொளியொன்றை தம்பி ஜீவதர்ஷன் முகநூலில் பகிர்ந்திருந்தார். கடந்த இருபது ஆண்டுகளில் பல தடவைகள் யாழ்ப்பாணம் போய் வந்தும், ஒடக்கரை வீதி அப்பத்தை ருசிக்காமல் வந்து விட்டேன். இத்தனைக்கும் ஒடக்கரை வீதி இருப்பது அம்மம்மாவின் சொந்த இடமான தும்பளைக்கு பக்கத்தில் தான்.

அடுத்த முறை போகும் போது அம்மம்மாவின் காணியை பார்த்து விட்டு, பங்குக் கிணற்றில் கால் நனைத்து விட்டு, ஓடக்கரை அப்பம் சாப்பிட்டு விட்டு வரவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதுண்டு, அந்த அடுத்த முறை இன்னும் வரவேயில்லை, ஓடக்கரை அப்பம் சாப்பிடும் அந்த அடுத்த முறை கிட்டடியில் கட்டாயம் வர வேண்டும்.
குடும்பத்தோடு யாழ்ப்பாணம் போவது என்றால் வெள்ளவத்தையில் இருந்து புறப்படும் அதிகாலை 5:20 கடுகதி ரயில் எடுப்பது தான் சிறந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பும் போது இரவு சொகுசு பேருந்தில் வருவது நேரத்தை மிச்சப்படுத்தும்.
வெள்ளவத்தையில் இருந்து காலம்பற வெளிக்கிடும் குளீரூட்டிய கடுகதி ரயில், மதியம் பன்னிரெண்டு மணியளவில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் வந்திறங்கும். அன்று மத்தியானம் நல்ல திறமான யாழ்ப்பாண சோறும் கறியும் சாப்பிட்டு விட்டு, யாழ்ப்பாண பேப்பர்களை வாசித்துக் கொண்டே, ஒரு நயளல உhயசைல் படுத்து ஒரு நல்ல குட்டித் தூக்கம் அடிக்கலாம். யாழ்ப்பாண வெய்யிலுக்கு, மத்தியானத்தில் கொள்ளும் குட்டித் தூக்கம் தான் சரியான நிவாரணி.

மூன்று மணியளவில் ஒரு நல்ல தேத்தண்ணியை குடித்து விட்டு, நல்லூரடிக்கு போய் ஒரு கற்பூரத்தை கொளுத்தி “அப்பனே முருகா” சொல்லி விட்டு, பெரிய கோயிலிற்கு போய், “மாதாவே எங்களை காப்பாற்றும்” என்று ஜெபித்து மெழுகுதிரி கொளுத்தலாம். யாழ்ப்பாணத்தில் எங்கு திரும்பினாலும் கோயில்களும் தேவாலயங்களும் நிறைந்திருக்கும், ஆனால் இந்த தெய்வங்கள் எதுவும் எங்கட சனத்தை காப்பாற்றவில்லை என்று நினைக்கையில் எழும் சினத்தை மட்டும் என்றும் அடக்க முடியாது.

நாலு மணியளவில், பார்வையால் விசாரிக்கும் watcherகு நான் old boy என்று பெருமையாக சொல்லி விட்டு பரி யோவான் வளாகத்திற்குள் காலடி எடுத்து வைக்கலாம். பின்னேரங்களில் பரி யோவான் மைதானத்தில் உசiஉமநவ அயவஉh அல்லது practice நடந்து கொண்டிருக்கும். மைதானத்தின் ஓரத்தில் matchஐ பார்த்துக் கொண்டிருக்க, பரி யோவானின் காற்று உங்களை தழுவும் கணங்கள் அற்புதமானவை, பள்ளிக்கால பழைய நினைவுகளை மீட்டுத் தரும் இதமான காற்று அது.

“அண்ணே எப்ப வந்தனியள்” என்று வந்து கட்டியணைக்கும் தம்பிமாரோடு பம்பலடித்துக் கொண்டிருக்க, தலையை சாதுவாக ஆட்டி புன்முறுவலோடு வரவேற்கும் ஆசிரியர்களும் கடந்து போவார்கள். பள்ளியில் படித்த காலப் பழக்கத்தில் ஆசிரியர்களை கண்டவுடன், சைக்கிளால் இறங்கி நிற்கும் பழைய பழக்கத்தை பழைய மாணவர்களும் தம்மையறியாமலே தொடர்வார்கள்.

யாழ்ப்பாணத்தில் ஆறு மணிக்கே இருட்டத் தொடங்கி விடும். மின்சாரம் இல்லாத புலிகளின் கட்டுப்பாட்டு காலத்து பழக்கமோ, மின்சாரம் இருந்த இராணுவ கட்டுப்பாட்டு காலத்து பழக்கமோ என்னவோ, இருட்டியதும் யாழ்ப்பாணத்தில் மெல்ல மெல்ல ஊரடங்கத் தொடங்கி விடும்.

அடுத்த நாள் காலம்பற எழும்பி, நன்றாக தலையில் தோய்ந்து விட்டு, வேட்டி கட்டி, சால்வையால் உடம்பை போர்த்திக் கொண்டு, நல்லூர் கோயிலில் அதிகாலை ஐந்து மணிப் பூசை பார்ப்பதே ஒரு தெய்வீக அனுபவம். அதிகாலை வேளையில் நல்லூர் கோயில் வாசலில் வந்திறங்கினால், கோபுரத்திற்கு மேலே இன்னும் நிலவு மிதந்து கொண்டிருக்கும், யாரோ கொளுத்தி விட்டுப் போன கற்பூரத்தின் வாசம் காற்றில் மிதந்து வர, அதனோடு இணையும் நாதஸ்வர ஒலியும் மேளச் சத்தமும், ஜம்புலன்களையும் ஆசுவாசப்படுத்தி, வாழ்வின் கவலைகளை மறந்து இறைவனுடன் ஐக்கியமாக்கவல்ல அழகிய தருணங்களை படைத்துவிடும்.

கோயிலுற்குள் முருகன் வள்ளி தெய்வானையோடு காட்சி தருவார். திரும்பிப் பார்த்தால் பரி யோவானின் பிரபல ஆசிரியர் கோபிகிருஷ்ணா சிரித்துக் கொண்டே தரிசனம் தருவார். முருகனை கும்பிட்டு விட்டு, செட்டி தெருவடியில் இருக்கும் தேத்தண்ணி கடையில் ஒரு நல்ல கோப்பி குடிக்காமல் வரக்கூடாது. சுடச்சுட டம்ளரில் நல்லா பால் விட்டு அவர்கள் போடும் கோப்பி..அந்த மாதிரி.

கோயிலால வந்து, காலம்பற சாப்பாட்டுக்கு வண்ணார்பண்ணை சிவன் கோவிலடியில் இருக்கும் சண்முகம் தேத்தண்ணி கடைக்குப் போகலாம். சுண்டக்காச்சிய பசுப்பாலில் கடும் சாயத்தை விட்டு அடித்து நுரையோட ஆத்தி தர, சுடச்சுட நுனி நாக்கில் சூடு அள்ள அப்படியே குடிக்கேக்க, அதுவும் நுரையை மெல்ல ஊதி ஊதி குடிக்கேக்க அப்படி ஒரு இதம் தரும் அனுபவமது. யாழ்ப்பாணத்தின் காலம்பற வெக்கைக்கு சூடா தேத் தண்ணியையும் குடிக்க உடம்பு வேர்க்கும், அந்த வேர்வையில் யாழ்ப்பாண காற்றுப் பட, அந்தக் காலமையே சுறுசுறுப்பாக பிறந்தது விடும்.

சூடாக பால் தேத்தண்ணியை குடித்துக் கொண்டே, இடியப்பத்தையும் சம்பலையும் சொதியோடு சாப்பிடலாம். சம்பல் என்றால் சம்பல், சும்மா அந்த மாதிரி. சாப்பிட்டு விட்டு கை கழுவ எழும்ப, சுடச்சுட வடையை கொண்டு வந்து தட்டில் அடுக்குவார்கள். “தம்பி ஒரு வடை தாரும்” என்று ஒரே கணத்தில் பல குரல்கள் எழ, அடுப்பால் வந்த வடை உடனேயே விற்று முடிந்துவிடும். “அண்ணே வடை முடிஞ்சுது.. இன்னொருக்கா போடுங்கோ”. குசினியில் இருக்கும் வடை மாஸ்டருக்கு ஓடர் பறக்கும்.

சண்முகம் கடையில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, தின்னவேலி சந்தைக்கு போய் நாலு நல்ல மரக்கறி விலை பேசி வாங்கும் அனுபவமே அலாதியானது, அதுவும் வெளிநாட்டில் வளரும் எங்கள் பிள்ளைகளிற்கு புதுமையானது. தின்னவேலி சந்தையை முடித்துக் கொண்டு குழம்பிற்கு கணவாயும் பொரியலிற்கு மீனும் வாங்க பாஷையூர் சந்தைக்கு போனால், அங்கும் ஒரு அருமையான அனுபவம் காத்திருக்கும்.

மத்தியானம் வீட்டுச் சாப்பாடு தான். கணவாய்க் கறி, கத்தரிக்காய் வெள்ளைக் கறி, மரவள்ளி பிரட்டல், மீன் பொரியலோடு, பப்படமும் மோர் மிளகாயும் சேர்த்து விளாச நாக்கு ருசியில் திளைக்கும், வயிறும் மனமும் மகிழ்வில் நிறையும்.

உறைக்க உறைக்க சாப்பிட்டு விட்டு இனிப்பு சாப்பிடாமல் இருக்கலாமோ?, அதற்கு நல்ல நல்ல உள்ளூர் தயாரிப்புக்களான கச்சான் அல்வா, ஜுஜூப்ஸ், தயிர் அது இது என்று ஏராளமான சாமான்கள் நாவலர் வீதியில் இருக்கும் வுஊவு ளரிநசஅயசமநவல் வாங்கிச் சாப்பிடலாம். வுஊவு அறக்கட்டளையூடாக தாயகத்தில் பல அரிய நலத்திட்ட ங்கள் முன்னெடுக்கப்படுவதாலும், முல்லைத்தீவிலும் யாழ்ப்பாணத்திலும் தயாரான பல உற்பத்தி பொருட்கள் அங்கு கிடைப்பதாலும் வுஊவு ளரிநசஅயசமநவல் சாமான் வாங்குவது வழமை.

பின்னேரமாக வெய்யில் கொஞ்சம் அடங்க, நல்லூரடியில் இருக்கும், தென்னிலங்கை சிங்களவர்களைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தின் பிரதான சுற்றுலா தளமான Rio Ice creamகு போகலாம்.

Rio இன்று இயங்கும் இடம், எங்கள் SJC92 நண்பன் பிரதீபனின் முந்தைய இல்லம். நாங்கள் பரி யோவானில் படித்த காலங்களில் பிரதீபனது Birthday party போய் வந்த ஞாபகத்தோடு, மொறு மொறு மட்டன் ரோலை chilli sauce நல் தொட்டு கடித்து சாப்பிடும் அனுபவத்தை வர்ணிக்க முடியாது, வாழ்ந்து பார்க்க வேண்டும். Rioக்கு போய்விட்டு அவங்கட Rio special Ice cream ஐ சாப்பிடாமல் வரமுடியாது, வரவும் கூடாது.

யாழ் நகரில் சூரிய அஸ்தனத்தை ரசிக்க அருமையான இடம் பண்ணைக் கடற்கரை தான். ஒல்லாந்தர் காலத்து கோட்டையை சுற்றி ஒரு றயடம போய் விட்டு, கடற்கரையோரமாக வந்திருந்து சூரியன் பண்ணைக் கடலில் கரையும் கணங்களில், கோட்டையை சூழ நிகழ்ந்த கொடிய யுத்தத்தின் நினைவுகள் மனதில் மீளவும் வந்தெழுந்து தொலைக்கும்.

இரவுலாவிகளிற்கும் யாழ்ப்பாணத்தில் திறமான இடங்கள் இருக்கிறது. வலம்புரி ஹோட்டலின் மரங்களிற்கு கீழே அமைக்கப்பட்டிருக்கும் கொட்டில்களில் அமர்ந்து ……

பழைய நண்பர்களோடு பழங்கதை பேசி, பாட்டுப் பாடி பம்பலடித்துக் கொண்டேயிருக்கும் மணியான பொழுதுகளை
உலகின் எந்தவொரு நகரமும் உங்களிற்கு தரமுடியாது.

-யூட் பிரகாஷ்

2,751 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *