உலகின் முதல் விஞ்ஞானி காட்டிடை வாழ்ந்த மனிதனே

ஏலையா க.முருகதாசன்

உலகின் முதல் விஞ்ஞானி யாரென்றால்,எந்தத் தயக்கமும் இல்லாத பதிலாக வெளிவருவது காட்டில் வாழ்ந்த மனிதனே என்ற பதில்தான்.விஞ்ஞானத்திற்கு எண்ணங்களே தோற்றுவாயாக இருக்கின்றன. எண்ணங்கள் சிந்தனைக்கு அத்திவாரம் இடுகின்றன.தொடர்சசியான சிந்தனை புதிய விஞ்ஞானக் கருவிகளை,தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டுபிடிக்க காரணமாகின்றன.
தற்செயலாக நடக்கும் சம்பவங்களே பெரும்பாலான விஞ்ஞானக் கருவிகளைக் கண்டுபிடிக்க அடிகோலியிருக்கின்றன.எந்தவொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் தனியொருவரின் சிந்தனையால்: கண்டுபிடிக்கப்படவில்லை.பலரின் சிந்தனைகளின் நீட்சியே விஞ்ஞானக் கண்டுபிடிப்பகளாகும்.

அப்பிள் மரத்திலிருந்து விழுந்த அப்பிள் பழம் மேல் நோக்கிப் போகாமல் கீழ்நோக்கி நிலத்திலே ஏன் விழுந்தது என்ற ஐசாக் நியூட்டனின் தொடர் சிந்தனையே புவியீர்ப்பைக் கண்டுபிடிக்க ஏதுவாகியது.அவருக்கு முன்னர் பழமோ பொருளோ பூமிiயை நோக்கி விழுவதைக் கண்ட பலர் ஏன் விழுகிறது என்று அதைப் பற்றியே தொடராக சிந்தித்திருக்க மாட்டார்கள்.ஐசாக் நியூட்டன் ஏன் கேள்வியைக் கேட்டு விடையைக் கண்டு பிடித்தார்

ஜோர்ஜ் ஸ்ரீபென்சன் என்ற இளைஞன் அடுபபடிக்குள் இருந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, தாயார் தண்ணீரைக் கொதிக்க வைத்த கேத்தல் மூடியை கொதித்த நீரின் ஆவி உந்தித் தள்ளியதைக் கண்ட அந்த இளைஞன் எது உந்தித் தள்ளுகிறது ஏன் உந்தித் தள்ளுகின்றது என்று தொடராகச் சிந்திக்கத் தொடங்கியதால்தான் நீராவிக்கு உந்தித் தள்ளும் வலு உண்டென்பதைக் கண்டு நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்தமையே புகைவண்டியின் தோற்றுவாயாகும்.

இத்தனை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும் முன்னோடியானவன் மானிட வரலாற்றின் முதல் படியிலிருக்கும் காட்டு மனிதனே என்றால் அதை மறுக்க முடியாது.

காட்டு மனிதனின் முதல் ஆயுதமே கற்கள்தான்.ஒரு கல்லால் இன்னொரு கல்லை உடைத்தும் உரசியும் மிருகங்களைத் தாக்குவதற்காக ஆயுதம் செய்த போது உரசிய கல்லிருந்து பறந்த தீப்பொறிகள் அருகிலிருந்து சருகுகளில் பட்டு தீ எரியத் தொடங்கியது.முதலில் தீயைக் கண்டு அஞ்சிய மனிதன் அது என்னவாக இருக்கும் என்று மெது மெதுவாக அருகில் செனறான்,தீ எனறால் அதன் தன்மை எதுவென்று அறியாத அவன் தீயைத் தொட்டுப் பார்க்கையில் தீயினால் அவன் உடலில் வலியும் காயமும் ஏற்பட தீயின் தன்மையை உணர்ந்தான்

தற்செயலாக தீயினால் சுடப்பட்டு வெந்த இறைச்சியைச் சாப்பிட்ட போது அதன் சுவை பச்சை இறைச்சியைவிட வேறாக சுவையாக இருப்பதைக் கண்ட காட்டு மனிதன் இறைச்சிகளை காய்கறிகளை தீயிட்டு சாப்பிடத் தொடங்கினான்.ஒவ்வொரு சிந்தனையின் முடிவிலும் இன்னொரு அரிய சிந்தனை பிறக்கும்.
ஐசாக் நியூட்டனையும், ஜோர்ஜ் ஸ்ரீபென்சனையும் தற்செயலாக நடந்த சம்பவங்கள் அவர்களின் உற்று நோக்குதலால் அர்களை விஞ்ஞானிகளாக்கியது.

காட்டு மனிதனின் வாழ்வியல் சூழ்நிலை அவனைச் சிந்திக்க வைத்தது.காற்றையும் தீயையும் மழையையும் கண்டு அஞ்சி நடுங்கிய அவன் நாளடைவில் அவற்றுக்கு பழக்கப்பட்டவனாக,அவற்றை தனது வாழ்வுக்கு உகந்ததாக மாற்றினான்.தீயைக் கண்டு அஞ்சிய மனிதன், தீயைக் கண்டு ஓடிய ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள் ஏன் ஓடுகின்றன என தற்செயலாக கண்டறிந்ததனால் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தீ மூட்டி அதனை அரணாகப் பாவித்துத் தன்னைத் தற்காத்துக் கொண்டான்.

மானிட வரலாறு காட்டு மனிதனிலிருந்துதான் அரம்பித்தது என்ற மானிட வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றப்படி பார்த்தால், காட்டு மனிதனிலிருந்துதான் விஞ்ஞானிகள் தோன்றினார்கள் என்றால் மறுப்பதற்கில்லை.
எமது அறிதலுக்கும் அனுபவத்திற்கும் உட்பட்ட பல சமகால நிகழ்வுகளை உற்றுநோக்கின், ஒவ்வொரு சமகால மனிதர்களின் சிந்தனை போல அதற்கடுத்த சமகால மனிதர்களின் சிந்தனை இருப்பதில்லை.வெறும் காடுகளாகவும் நிலம் பாறைகளாகவும் ஆறு குளம் கடல்களாகவும் இருந்த இந்தப் பூமி மானிட வர்க்கத்தினால்தான் இந்த வளர்ச்சியடைந்திருக்கின்றதெனில்,மானிட வர்க்கத்தின் வரலாறு எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கிருந்தே அந்த மனிதர்களின் சிந்தனையே இன்றைய விஞ்ஞான நீட்சியாகும்.

எனவே தீயைக் கண்டுபிடித்து அதை தனதாக்கிய காட்டு மனிதனே முதல் விஞ்ஞானி என்பதை மறுக்க முடியாது.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்றால் அவை இன்று மானிட உலகம் அனுபவிக்கும் கணிணியுக டிஜிட்டல் உலக கண்டு பிடிப்புகள் மட்டுந்தான் என்று எண்ணுவது தவறு.மானிட வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையும் தொடர்ச்சியான சிந்தனைக்:குட்பட்ட வளர்ச்சியேயாகும்.
துலாவும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புத்தான்,ஓலையை வார்ந்து ஒன்றுடன் ஒன்று பின்னி இழைத்தால் பெட்:டியாகும் கடகமாகும் என்பதும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பேயாகும்.

1,233 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *