“உள்ளூராட்சி மன்ற தேர்தல்”தமிழர்கள் முன்னுள்ள சவால்

இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்து 6 மாதங்கள் நெருங்குகிறது.இந்த ஆறு மாதங்களில் இலங்கையர்கள் குறிப்பாக மாற்றத்தை விரும்பியவர்கள் (பெரும்பான்மையான சிங்கள மக்கள் மற்றும் சொற்பளவிலான தமிழ் மக்கள்) பெற்றுக்கொண்ட நன்மைகள் என்பது வெகு குறைவானதே. சுதந்திரம் கிடைத்து 78 வருடங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து தரப்புகளும் செய்த வரலாற்று தவறுகளின் பாடங்களும் நாட்டின் மக்களை ஏமாற்றி ஏமாற்றி செய்துவந்த ஆட்சிகளும் அதேபோல், நாட்டையும் மக்களையும் சுரண்டி சுரண்டி நாட்டை வங்குரோத்தாக்கிய காரணங்களுமே ஒரு மாற்றத்துக்கு இலங்கையர்கள் அணி திரண்டார்கள்.அந்த அணி திரள்வின் பயனாக ஆயுதமேந்தி நாட்டில் பல வன்முறைகளுக்கும் கொலைகளுக்கும் காரணமான ஒரு அணியை தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்துக்கு இலங்கையர்களில் பெருமளவானோர் தள்ளப்பட்டார்கள்.அந்த பெருமளவானோர் என்போர் விரும்பி இந்த ஆட்சியை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று நினைப்பதற்கு எந்த காரணங்களும் இருக்கவில்லை.அவர்கள் அனைவருக்கும் இருந்த ஒரே தெரிவு இத்தரப்பு (தேசிய மக்கள் சக்தி-ஜே..வி.பி.)மாத்திரமே இதுவரை இந்த நாட்டை ஆண்டிருக்கவில்லை.ஆகவே அவர்களுக்கு “ஒரு தடவை கொடுத்து பார்ப்போம்” என்றே தெரிவு மாத்திரமே இருந்தது.
அந்த வெற்றிடத்தை, அதாவது மக்கள் மத்தியில் இருந்த “அடுத்த ஆட்சி யாருக்கு” என்ற குழப்பமான வெற்றிடத்தை நிரப்புவதற்கு முனைந்தவர்களே இன்றைய ஆட்சியாளர்கள். அவர்களுடைய தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையுமே பிரதானமாக கொண்டிருந்தது.2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியில் இருந்த மக்களுக்கு “பூஸ்ட்” கொடுப்பதாக ஜே.வி.பி. அதாவது தேசிய மக்கள் சக்தியின் பேச்சுக்கள் அமைந்தன.அதனால் ஆறுதல் அடைந்த மக்கள் “மாற்றம்” ஒன்றுக்கு தயாரானார்கள்.அதனை செய்தும் காட்டினார்கள்.ஆனால், இந்த ஆறு மாதங்களில் அரசாங்கம் நம்பி வாக்களித்த மக்களுக்கு எதனையும் செய்யவில்லை,மாறாக இந்த நாட்டில் ஆட்சியாளர்கள் மாறும்பொழுது முன்னைய ஆட்சியாளர்களை பழிவாங்கும் வழமையான செயற்பாட்டையே முன்னெடுக்கிறார்கள் என மக்கள் அதிருப்தி நிலையில் இருக்கும் ஒரு சூழலில்தான் நீண்டகாலமாக நடைபெறாமல் இருந்த உள்ளூராட்சி சபைக்கான தேர்தலுக்கு இலங்கையர்கள் முகம்கொடுக்க இருக்கிறார்கள்.
இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தமிழ் மக்கள் எவ்வாறு முகம்கொடுக்க போகிறார்கள்?,தமிழ் தலைமைகள் இந்த தேர்தலுக்கு எவ்வாறு தயாராகப்போகிறார்கள்? என்பது மிக முக்கியமான கேள்விகளாகும்.காரணம்,யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்திருக்கும் சூழலில் அதனுடைய வடுக்கள் இன்றும் தமிழ் மக்களுடன் ஓட்டிக்கொண்டே இருக்கிறது. அதனை தாண்டி தமிழர் தாயகம் மறைமுகமாக பல சூறையாடல்களை எதிர்கொண்டு வருகிறது.குறிப்பாக நில அபகரிப்பு,கலை-கலாசாரா-பண்பாட்டு அழிவுகள் மறைமுகமாக இன்றும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.இவ்வாறான ஒரு சூழலில் எதிர்வரும் தேர்தல்களில் சிங்கள தரப்புகள் தமிழர் தேசங்களில் வெற்றிபெறுவது என்பது மிகப்பெரும் ஆபத்தை இன்னும் சில வருடங்களில் ஏற்படுத்திவிடும்.
தேர்தல் பரப்புரையின்போது, ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளாக இருக்கும் அரசியல் கைதிகளுடைய விடுதலை,காணி விடுவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தற்போதைய அரசாங்கம் கூறியிருந்தது.ஆனால்,அதற்கான எந்த முன்னெடுப்புகளை ஆகக்குறைந்தது பேச்சில் கூட அரசாங்கம் தவிர்த்துவருகிறது.அதற்கு மாறாக பலர் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தொடர்ந்தவண்ணமுள்ளது.
எனவே தமிழ் மக்களும் தமிழ் தலைமைகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் சிந்தித்து தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறார்கள். நீண்டகாலமாக தமிழ் தலைமைகளின் ஒற்றுமை தொடர்பில் பல்வேறு தரப்புகளாலும் சர்வதேச நாடுகளாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால்,அந்த சூழல் இன்றும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது.மக்கள் நல அரசியலுக்கு பதிலாக சுயநல அரசியலுக்கே தமிழ் தலைமைகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.நீண்ட போராட்டத்தை அனுபவித்த ஒரு இனத்தின் அரசியல் எவ்வாறு இருக்கக்கூடாதோ அதற்கு சிறந்த உதாரணமாக தமிழ் தலைவர்கள் கடந்த 16 வருடங்களாக செயற்பட்டுவந்திருக்கிறார்கள். அதனுடைய தாற்பரியம் எத்தகைய கறுப்பு வரலாறுகளை பதிந்திருக்கிறது என்பதை தமிழர் தாயகம் மீது பற்று வைத்துள்ளவர்களுக்கு நன்றாக புரியும்.
பல இழப்புகளை சந்தித்த ஒரு இனத்தின் அரசியல் பயணம்-பல அழிவுகளை சந்தித்த ஒரு இனத்தின் அரசியல் பயணத்தில் பக்குவம் இருந்திருக்க வேண்டும்,இராஜதந்திரம் இருந்திருக்க வேண்டும்,சர்வதேசத்துடன் சிறந்த உறவு இருந்திருக்க வேண்டும்.ஆனால் இவை எவற்றையும் பொருட்படுத்தாமல் சில்லறைத்தனமான அரசியல் செய்த தலைவர்கள் நிச்சயமாக தமிழினத்தில் மாத்திரமே இருக்கிறார்கள்.இந்த நிலைமை மாறவேண்டும்.அந்த மாற்றம் ஒன்றே போராடிய-போராடிக்கொண்டிருக்கின்ற ஒரு இனத்துக்கு விடிவை ஏற்படுத்திக்கொடுக்கும்.ஆகவே எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் இருந்தாவது புதியதொரு பயணத்துக்கு தமிழ் தலைமைகள் என்று கூறிக்கொள்வோர் தயாராகவேண்டும்.சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டு-தலைமை போட்டிக்கான அரசியலை உதறித்தள்ளிவிட்டு இரத்தம் தோய்ந்த மண்ணுக்கான விடுதலை பயணத்தினை தொடர்ந்து முன்கொண்டு செல்லும் வகையிலான ஒரு அரசியல் தெரிவிக்கு தமிழ் தலைமைகள் முன்வருவது காலத்தின் தேவையாகும்.
அந்த அடிப்படையில் கடந்தகால தவறுகளை உணர்ந்து ஒரு கூட்டு செயற்பாட்டுக்கான களம் அமைக்கப்படுவது அவசியம்.அதற்கான களமாக இந்த தேர்தலை பயன்படுத்துவது அவசியமாகும்.தமிழ் தலைமைகள் எவ்வாறு சிதறுண்டு இருக்கிறார்களோ அதேபோல்,இன்று தமிழ் மக்களும் பல திசைகளாக சிதறுண்டு இருக்கிறார்கள்.இவர்களை ஒன்றுதிரட்டவேண்டிய கடமை தமிழர்கள் மத்தியில் வாழ்கின்ற புத்திஜீவிகளதும் சமூக செயற்பாட்டாளர்களதும் கடமையாகும்.அது ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவரப்படுவது அவசியமாகும்.சிங்கள மக்கள் எப்படி ஒரு மாற்றத்துக்கு தயாரானார்களோ அதேபோல்,தமிழ் மக்களும் ஒரு மாற்றத்துக்கு தயாராகவேண்டும்.அந்த மாற்றத்துக்கான களத்தை ஏற்படுத்தவேண்டிய தார்மீக கடமை மண் மீதும் மொழி மீதும் பற்றுக்கொண்டு செயற்படும் செயற்பாட்டாளர்களுடைய கடமையாகும். அரசியல்வாதிகளின் கையில் இருந்து தமிழரின் அரசியல் ஒரு அறிவுபூர்வமான போராட்ட குணமிக்க மண் மீதும் மொழி மீதும் பற்றுள்ளவர்களின் கைகளுக்கு செல்வதே அடுத்த கட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை இத்தரப்புகள் எவ்வாறு சந்திக்கபோகின்றன?மக்களை எவ்வாறு அணிதிரட்டப்போகின்ற?தமிழ் தலைமைகளை எவ்வாறு ஓரணியில் திரடப்போகின்றன?என்பதிலேயே எதிர்கால தமிழருடைய இருப்பும்-எதிர்கால ஆரோக்கியமான முன்னெடுப்புகளும் கடந்தகால அழிவுகளுக்கான தீர்வும் அமைந்திருக்கிறது.