கதை சுப்பர்

0
vm276

கே.எஸ்.சுதாகர் அவுஸ்திரேலியா.

சமீபத்தில் வீட்டிற்கு வந்த கமலாக்கா, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றை வாங்கிச் சென்றார்.

“என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறா. உங்கட புத்தகத்தையும் ஒருக்காத் தாங்கோ. வாசிக்கக் குடுப்பம்.”

“அம்மாவுக்கு என்ன வயசாகின்றது?”
“எண்பத்தைஞ்சைத் தாண்டிவிட்டா…”

“நல்லது. இந்த வயசிலையும் நல்ல சுறுசுறுப்பா இருக்கிறா. குடுங்கோ வாசிக்கட்டும்.”
சில வாரங்கள் கழிந்திருக்கும். கமலாக்கா எனது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென மனைவி தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.

“கமலாக்காவின்ரை அம்மா… உங்களோடை கதைக்க வேணுமாம்.”
“தம்பீ… உம்முடைய கதைப்புத்தகம் அற்புதம். முதலாவது கதையை ஏழெட்டுத் தரம் வாசிச்சுப் போட்டன்.”
என் மனதிற்குள் மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு கதையை ஒரு தடவை வாசிக்கவே பலரும் தயங்கும் இந்தக் காலத்தில் இப்படியொரு பெண்மணியா?

”ஏன் அம்மா… அவ்வளவு நல்லாவா இருக்கு.”
“அப்பிடியில்லைத் தம்பி… சுருட்டி வைச்ச பாயை விரிக்கிற மாதிரி இப்ப என்ரை நிலைமை இருக்கு…” எனக்கு அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை. அவரே விளக்கம் தந்தார்.
“இல்லை தம்பி… ஒரு பக்கமாக வாசிச்சுக்கொண்டு போக, மற்றப்பக்கமா மறந்து போகுது… இன்னுமொரு நாலைஞ்சு தரத்திலை முடிச்சுப் போடுவன் தம்பி…”

“அதுதான் நல்லது அம்மா… விடாமல் தொடர்ந்து வாசியுங்கோ” என்று நான் அவரை உற்சாகமூட்டினேன்.

சில பேர் தலையணை சைசில் புத்தகம் போட்டு உறங்கக் கொடுக்கின்றார்கள். நான், ஒருவர் ஆயுள் உள்ளவரை படிப்பதற்கு ஒரு புத்தகம் குடுத்திருக்கின்றேன்.

நீங்கள் நிறையப் புத்தகங்கள் படிப்பதாக உங்கள் மகள் சொன்னாரே… இப்படித்தான் அந்தப் புத்தகங்களையும் படிக்கின்றீர்களா?’ என்ற கேள்வி, தொலைபேசி என் மனைவியின் கைக்கு மாறியபின்னர் தான் என் மூளைக்குள் வந்தது. அவருக்கு எண்பத்தைஞ்சில் கிடைத்த பாய் விரிக்கும் தொழில், எனக்கு அறுபதில் கிடைத்திருக்கின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *