கருணைக்கொலை சில சிந்தனைகள்
- “அஞ்சனம்” குறும்படத்தை முன்வைத்து
தயாரிப்பு: கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள்.
எழுதியவர்: னுச. எம்.கே.முருகானந்தன்
ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை எட்ட முயல்கிறது. மிக மெதுவாகவே அக்கரங்களால் அசைய முடிகின்றது. ஓட்டுனர் இல்லாத மாட்டு வண்டி போல, போகும் திசை தெரியாது அந்த ஒற்றைக் கை தடுமாறுகிறது. கைகளுக்கு இருக்க வேண்டிய திடமும் உறுதியும் இன்றி இயங்கும் அது கோப்பையை நெருங்கிவிட்டது. ஆனால் பற்ற முடியவில்லை. கோப்பை தட்டுப்பட்டு கீழே விழுந்து நீர் சிந்திவிட்டது. மறுகையானது எதுவும் முடியாதவாறு ஏற்கனவே முற்றாகச் செயலிழந்துவிட்டது.
படுக்கை நோயாளி. தசைகளின் இயக்கம் குறைந்து வரும் Motor Neurone Disease நோயிலிருந்து முற்றாக அவளை மீட்க சிகிச்சைகள் எதுவும் உதவாது. நோய் கால ஓட்டத்தில் தீவிரமடைந்து வருவதைத் தடுக்க முடியாது. பொதுவாக உணர்விழப்பு இல்லை. வலிகளை உணர முடிவது பெரும் துன்பம். உதாரணமாகக் கையில் வலி என்றால் அக்கையை அசைத்து வேறு இடத்தில் வைக்கவோ மற்ற கையால் நீவி விடவோ முடியாது. ஆற்றாமை ஆட்கொள்ளும்.
கண் மூளை செவிப்புலன் போன்றவை மற்றவர்களைப் போல சாதாரணமாக இருக்கும். இதனால் சுற்றிலும் நடப்பவற்றையும் தனக்கு ஏற்படுகிற உடல் வேதனைகளையும் புரிந்து கொள்வார். உள்ளம் வேதனையில் ஆளும். ஆனால் அதிலிருந்து தற்காலிகமாக வேனும் விடுபட முடியாது. தன் உறுப்புகளை அசைக்க முடியாத வேதனையும் கவலையும் இயலாமையும் பெருகிவர மனவிரக்தி ஆட்கொள்ளும். இவ் வேதனைகள் ஓரிரு நாட்களுக்கானது அல்ல. பல மாதங்கள் தொடரும். அவற்றிலிருந்து விடுதலை மரணம் ஒன்றினால் மட்டுமேயாகும்.
அதுவும் விரைந்து வராது. மரணதேவன் அணைந்து வேதனைகளிலிருந்து விடுதலை கொடுக்க மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகலாம். அது வரை நோயாளியும் அவரைப் பராமரிப்பவர்களும் படும் வேதனை சொல்லி மாளாது.
“அஞ்சனம்” ஒரு குறும்படம். கொழும்பு மருத்துவ பீட மாணவர்களால் தயாரிக்கப்பட்டு, கொழும்புப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கம் நடாத்திய போட்டியில் கலந்து முதற் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. தான் சொல்ல வந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக மனதில் பதியும் வண்ணம் தயாரித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் லோக பிரஷாத் பிரேமகுமார். சர்ச்சைக்குரிய விடயத்தை எடுத்தாண்ட துணிவு பாராட்டத்தக்கது. குறைந்த வசனங்களை பொருத்தமான காட்சிகளுடன் வளர்த்தெடுத்த திறமை நெறியாளர்களான நிசாந்த் சுப்பிரமணியம், பிரணவன் சிவஞானம் ஆகியோராவார்.
அவர்கள் பேச வருகிற விடயம் கருணைக்கொலை பற்றியது. தனது தாயின் வேதனைகளைப் பொறுக்க முடியாத மகன் கருணைக்கொலையை நாடுகிறான். மருத்துவர்கள் கைவிரித்துவிடுகிறார்கள். சட்டமும் இதற்கு இடமில்லை என நிராகரித்துவிடுகிறது. ‘mercy killing’ அல்லது நுரவாயயௌயை எனப்படும் கருணைக்கொலை என்பது ஏற்புடையதுதானா? மருத்துவத்தால் மீட்க முடியாத, மரணம் நெருங்கி வரும் ஒருவரின் மரணத்தைச் சற்று முன்னதாக மருத்துவ உதவியுடன் நிகழ்த்துவதாக இதை விளக்குகிறார்கள். ஒரு கொலையைச் சற்று நாகரீகமான வார்த்தைகளால் விளக்குவதாகவே எனக்குப் படுகிறது.
ஒருவருக்கு மரணத்தை அளிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அது மருத்துவர்களால், மருத்துவக் காரணங்களுக்காகச் செய்யப்பட்ட போதும், போதும் நியாயமானதுதானா? உயிர் என்பது இயற்கை அளித்த வரம் அது. அதைப் பறிப்பது என்ன நியாயம்? அது நோயாளியின் பூரண சம்மதத்துடன் என்று சொன்னாலும் கூட எவ்வாறு நியாயமாகும்? கொலைகளைக் கண்டிக்கிறோம். தற்கொலைகள் செய்யக் கூடாது என்கிறோம். அவ்வாறு செய்ய முனைபவர்களுக்குத் தண்டனையும் கொடுக்கிறோம். மரண தண்டனையையே இல்லாது ஒழிக்க வேண்டும் என முழங்குகிறோம். கருணைக்கொலை என்பது மரணம் நெருங்கிவிட்ட ஒருவருக்கு என்கிறார்கள்.
ஆனால் மரணம் ஒருவருக்கு எப்பொழுது நிகழும் என யாராவது அச்சொட்டாக முன் கூட்டியே சொல்ல முடியுமா? சோதிடர்கள் சொல்வதை விட மருத்துவர்கள் கணிப்பது சற்று அறிவுபூர்வமானதாக இருந்தாலும் கூட அதுவும் துல்லியமாக முன்கூற முடியாததே. மிகத் திறமையும் அனுபவமும் மிக்க மருத்துவர்களின் கணிப்புகளையும் தாண்டி எத்தனை பேர் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். மாறாக, நோய் எதுவுமில்லை என சர்டிபிகேட் வாங்கிய எத்தனை பேர் மறுநாளே தலையைப் போட்டிருக்கிறார்கள்? “மற்றவர்களை விடுங்கள். துன்பப்படும் நோயாளி தன்னால் இனியும் தாங்க முடியாது, தனக்கு மரணத்தைத் தாருங்கள் என வேண்டும் போது அதைச் செய்வதுதானே நியாயம்” என்று சிலர் சொல்லக் கூடும். அவ்வாறு செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை எழுதிக் கையெழுத்திட்டு சுயநினைவோடு முன் கூட்டியே மருத்துவர்களுக்குக் கொடுத்திருந்தபோதிலும், அதைப் பயன்படுத்தியவர்கள் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு மிக மிகக் குறைவே என்கிறார்கள். இவ்வாறு நடப்பது கருணைக்கொலையை சட்டபூர்வமாக அங்கீகரித்திருக்கும் ஒருசில மேலை நாடுகளிலாகும். இங்கு அவ்வாறு செய்ய முடியாது.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டாலும், நீண்ட நாள் பாதிப்புக்குள்ளாகும் மேற் கூறிய போன்ற நோயாளரை அரசு மருத்துவ மனைகளில் வைத்துப் பார்க்கும் வசதி இல்லை. வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். வீட்டில் வைத்துப் பராமரிப்பது மிகுந்த மன உளைச்சலைத் தரும். அதற்காகவும் மிகுந்த செலவைச் சமாளிக்கக் கூடிய பொருளாதார வலு பெரும்பாலான குடும்பங்களுக்குக் கிடையாது.
மிக முக்கிய காரணம் அத்தகைய நோயாளரைப் பராமரிக்கும் மருத்துவத் துறையான (Palliative Care) இங்கு வளரவே இல்லை. அத்தகைய நோயாளரை அன்போடும் ஆதரவோடும் அணுக வேண்டும். உணவு, நீராகாரம், மலசலம் கழித்தல் போன்ற பிரச்சனைகள் இன்றி வாழ வழி செய்ய வேண்டும். அவர்கள் வேதனையால் துன்புறாது காப்பாற்ற வேண்டும். அவர்கள் உளநலம் கெட்டு மனச்சோர்விற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும். மனச்சோர்வு ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை செய்ய வேண்டும்.
“சாகப்போகிறார்தானே வைத்தியம் செய்து என்ன பயன்” என்ற மறைமனநிலை பராமரிப்பவர்கள் மனதிலிருந்து அகல வேண்டும். தம்மால் முடிந்ததை மருத்துவர்களும் அரசும் மட்டுமின்றி வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டும். சுற்றியுள்ள சமூகம் கைகொடுக்க முன்வர வேண்டும். அதையே மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் மக்களுக்குச் சொல்ல வேண்டும். முன்மாதிரியாகச் செய்து காட்ட வேண்டும்.
அந்திமகால நோயாளரைப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம். இது பற்றிய அனுபவப் பகிர்வின் ஆரம்ப முயற்சியாக இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் எடுத்துள்ளது. மருத்துவர்களுக்குப் பயிற்சியும் வழங்கியுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் பயிற்சிகளை கொழும்பிலும் காலியிலும் ஏற்கனவே நடத்தியுள்ளது. விரைவில் யாழ்ப்பாணத்திலும் நடத்த இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எனது ‘ஹாய் நலமா’ புளாக்கில் உள்ளது.
இசை அமைத்திருப்பது கஸ்தூரி சூர்யகுமார் மற்றும் உமேஸ் ஜெயராஜா ஆகியோராவார். மனதைப் பிழிவதாக இருக்கிறது. முக்கியமான தாய் பாத்திரத்தில் யுகதர்சனி சிவானந்தன் சிறப்பாக முகபாவங்களை வெளிப்படுத்துகிறார். நோயின் வேதனையை வெளிப்படுத்தும் உடல்மொழிகள் சிறப்பாக இருந்தது. மகன் பாத்திரத்தில் மார்ஸ் முத்துத்தம்பி முகத்தை வெறிப்பாக வைத்திருக்கிறார். உணர்வுகளைச் சற்று சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கலாம். தோற்றம் அண்ணன் தங்கை போல இருக்கிறதே ஒழிய தாய் மகன் போலில்லை. பாடல்கள் டினேஸ்நாந்த் சுந்தரலிங்கம். ஒளிப்பதிவு நிசாந் சுப்பிரமணியம். இதே நோயால் மூன்று வருடங்களாகத் துன்புறும் ஒருவரை அண்மையில் பார்த்தேன். ஒரு சிறு படுக்கைப் புண் தானும் வராது அக்கறையோடு குடும்பத்தவர்கள் பராமரிக்கிறார்கள். அவரால் இப்பொழுது பேசவும் முடியாது. ஏதாவது சொல்ல முயன்றால் அர்த்தம் புரியாத ஓசைகள்தான் எழும் சொற்கள் வராது. சைகை காட்டுவதற்கு கைகள் இயங்காது. அவரது முகபாவனைகளை வைத்துத்தான் மனைவி புரிந்து கொள்கிறாள்.
“எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் அவருக்கு சரியான கோபம் வருகிறது” என மனைவி விம்மலோடு சொன்னாள். பேச முடியாத சைகை காட்ட முடியாத அவரின் கோபத்தை அவரது கண்களிலும் முகத்திலும் பார்த்துப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அனுபவப்பட்டிருந்தாள். அக்கறைப்படுகிறாள் என்பது மனநிறைவை எனக்குத் தந்தது. வேறு ஒரு பெண் அவளும் பல வருடங்களாகப் படுக்கை நோயாளிதான். ஆனால் இது வேறு நோய். அவளை அக்கறையோடு பராமரிப்பதற்காக அவளது மகள் தனது அரச உயர் பதவியை உதறித்தள்ளிவிட்டு வீட்டோடு இருக்கிறாள். எவ்வளவு தியாகங்களைச் செய்கிறார்கள் இந்தப் பெண்கள். அவசர புத்தியும் நிதானமின்மையும், வீட்டு வேலைகளுக்குப் பழக்கப்படாத தன்மையும் கொண்ட ஆண் என்பதால்தானா அந்த மகன் கருணைக்கொலையை நாடினான் என எனது மனம் யோசித்தது.
குறும்படம் கருணைக்கொலையை சிபார்சு செய்யவில்லை என்பது உண்மையே. அதற்காக வாதாடவில்லை என்ற போதும் அதை ஒரு தேர்வாகவே கொடுத்திருக்கிறார்கள். திரைப்படம் உணர்வுபூர்வமாக கருவைப் பேசுகிறது. அதை நன்றாகச் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்தத் தேர்வு சரியானதானா?
அவள் தனக்கு மரணம் வேண்டும் என வேண்டுகிறாள். ஆனால் “உனக்குச் சாக மருந்து தாரேன்” என்று கேட்டிருந்தால் குடித்திருப்பாளா? நிச்சயம் தவிர்த்திருப்பாள். இங்கு அவன் செய்தது ஒரு விதத்தில் கொலையாகவே இருக்கிறது. அது மாத்திரமல்ல தான் செய்த கொலைக்கான பழியைச் சமூகம் மீதே போட்டுவிடுகிறான். “நான் ஒரே ஒரு விடயத்தைதானே சமூகத்திடம் கேட்டேன். அதைத் தர அது மறுத்துவிட்டது” என்கிறான். எவ்வளவு அபத்தமான கேள்வி. இவ்வாறான விடயத்திற்கு அதாவது ஒரு கொலைக்குச் சமூகம் எவ்வாறு ஒப்புக் கொள்ள முடியும்?
படுக்கையில் கிடக்கும் அவளது தோற்றத்தைப் பார்த்தால் அவள் இன்னமும் பல மாதங்கள் அல்லது ஓரிரு வருடங்கள் வாழ முடியும் போலத் தோன்றுகிறது. அவள் சாக வேண்டும் என விரும்புகிறாள் என்ற போர்வையில் அவளது மரணத்தைத்தானே மகன் தீர்மானிக்கிறான். இவ்வாறு கருணைக்கொலைக்கான தீர்மானம் எடுக்கும் உரிமையைத் தனிநபரிடம் கொடுப்பது ஆபத்தானது துஷ்பிரயோகம் செய்யக் கூடியது என்பதையே இக் குறும்படம் மூலம் நான் கற்றுக்கொண்டேன். நிறை குறைகள் இரண்டும் இருந்தபோதும் மிகச் சிறப்பான முன் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. இத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
(எம்.கே.முருகானந்தன் அவர்களின் இரசித்த சினிமா நூலில் இருந்து.12 ஆண்டுகளுக்கு முன் வெளியான குறும்படம்.)
![]()
